Tuesday, December 18, 2012


ஓம்

பிள்ளையார் கதை

காப்பு
கரும்பும் இளநீரும் காரெள்ளும் தேனும்
விரும்பும் அவல் பலமும் மென்மேல் - அருந்திக்
குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

ஆறுதனைச் சூடிமகனே ஆடரவைப்பூணி மகனே
நீறுதனைப் பூசி மகனே நீள் பிறையைச் சூடிமகனே
ஏறி இடபத்தேறி மகனே யேழுலகத்தீசன் மகனே
சீறு கழிற்றி யானை முகவாவடியேன் றீவினை கெட்டோடவருளே.

திருவிளங்கும் மார்பன் மருமகனே சேவதனில் ஏறி
வரும் அறன்றான் ஈன்றருளும் மைந்தா- முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன்
நின் கதைக்கு நீ என்றும் காப்பு.

பூமாதுசேரப் பொற்பு மிகச் செல்வம் பொலிந்தோங்க
நாமாது நாவில் நடனம் புரிய நலம்பெருக
ஆமேவு பாலு மோதகமும் தேனு மயின்றருள்செய்
சித்திவிநாயகப் பிள்ளையார் பொற்பாதமலர் வணங்குதுமே.


சரஸ்வதி துதி

புத்தகத்துள்ளுறை மாதே
பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய்
வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடையுடையாளே
மூவுலகுந் தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய்
செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலம் திண்ணும் வாயாய்
சரஸ்வதி என்னும் திருவே
எக்காலமும் உனைத்தொழுவேன்
இயலிசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம்
முழுதும் எனக்கருள் செய்து என்
சித்தந் தனில் நீ இருந்து
திருவருள் செய்திடுவாயே.



விநாயகர் அகவல்

சீதக்களபச் செந்தாமரைப்பூவும்
பாதச்சிலம்பும் பல இசைபாட
பொன் அரை ஞாணும் பூந்துயில் ஆடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தள எரிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் வெண்ணீற் றணியும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மத சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
பொற்புற விளங்கும் பொருளே கையிலை
அற்புதமீன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுது என்னை ஆட்கொள்ளவேண்டி
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்து
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே எந்தன் உளந்தனில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையும் எமக்கினிதருளி
கருவிகள் ஒடுங்கும் கருத்தறிவித்து
இருவினைதன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐப்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுதறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலியதனிற் கூடிய அசபை
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடச் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூஷமமும்
என்முகமாக இனிதெனக்கருளி
புரியட்டகாயம் புலம்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி
இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னைப் பழவினை முதலறக் களைந்து
வாக்கும் மனமும் இல்லாமனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
கூடுமை தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக்கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாய விரைகழல் சரணத்து
உரிமைசேர் அகவல் ஓதினார்
பொருளோடு  தவழும் புகழும் பெறுவரே.


அதிகாரம்

பொன்னிறங் கடுக்கும் குணச்செறி குடுமித்
தென்மலை இருந்த சீர்சால் முனிவன்
கந்தமும்மதக்கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ்  வகையால் தெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவியில் அரில் தபத்திரட்டித்
தொன்னெறி விளங்கத் சொல்லுவன் கதையே.




கதை

மந்திர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்து தவழ்சோலை இராசமாநகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும்
சுந்தரப் புதல்வரை பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமும் கடிமலர்ப் பொய்கையும்
தட நிழற்பள்ளியும் தாம் பல சமைத்து
புதல்வரைத் தருகெனப் பொருப்பு அரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடும் நாளில்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவன் அடி வணங்கி
பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவர்க்கு அருள் புரிந்து அருளென
அந்த அந்தணனுக்கு இந்த நற்பிறப்பில்
மைந்தரில்லை என்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பில்லா மறையோன் தனக்கருள் செய்க என
எமையாளுடைய உமையாள் மொழிய
இமையாமுக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதமை என்று
பண்சொல் பயிலும் பாவையை நோக்கிப்
பேதாய் நீ போய் பிற என மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வுற்றுப்
பொன்றிடும் மானிடப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்ப
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் அவட்கு நீ பிள்ளையாக
சென்று அவன் வளந்து சில பகல் கழித்தால்
மன்றல் செய்து அருளுவோம் வருந்தலை என்று
விடை கொடுத்தருள விலங்கல்லா மகளும்
பெடமயிற் சாயல் பெண்ணகவு ஆகித்
தார்மலிமார்பன்  சதுர்மறைக்கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
பாவையும் சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி
ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வானுதல் தன்னை
மானிட மறையோர்க்கு வதுவை செய்திட
கான்அமர் குழலியை கருதிக் கேட்பப்
பிறப்பு இறப்பு இல்லா பெரியோர்க்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என்
மற்றவன் தன்னை உன் மணமகனாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானென
கருந்தட நெடுங்கண் கெளரி அங்கு உரைப்ப
மருமலிகமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச்சாலையது அமைத்துப்
பணிய நீ பற்பல பாங்கியர் சூழ
அணிமலர் குழல் உமை அருந்தவம் புரிதலும்
அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாம் என
இருவரும் அறியா இமையவர் பெருமான்
மானிடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிடயோக மறையவன் ஆதி
குடையோடு  தண்டு நற்குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக்கரையில்
கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறுங் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண் இடை மெல்லியலாய் நீ
என்பெறத்தவம்  இங்கு இயற்றுவது என்றலும்
கொன்றைவார் சடையனைக்கூட என்று உரைத்தலும்
நன்று எனச்சிரித்து நான் மறையோனும்
மாட்டினில் ஏறி மான் மழு தரித்துக்
காட்டினிற் சுடலையில் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையிம்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சை கொண்டு எழலும் பித்தன் தன்னை
நச்சிநீர் செய்தவம் நகைதரும் நுமக்கென
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்கு அவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர்வந்து செழுமலர்க் குழலியை
வாடுதல் ஒழிகென மனம் மிகத்தேற்றி
சிந்துர வாள்நுதற் சேடியர் சிலர் போய்
தந்தை தாய் இருவர் தாளினை வணங்கி
வாவிக்கரையில் வந்தொரு மறையோன்
பாவை தன் செங்கையைப் பற்றினன் என்றலும்
தோடு அலர் கமலத் தொடை மறைமுனியை
ஆடகமாடத்து அணிமனை கொணர்க என
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீ எழுந்து அருள் என
மைமலர்குழலி வந்து எமை அழைக்கில்
அம்மனை புகுவன் என்று அந்தணன் உரைத்தலும்
பொற்றொடிநீ போய்ப் பொய்கைக்கரையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கென
சிவனையிகழ்ந்த சிற்றறிவுடையோன்
அவனையான் சென்று இங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை மடந்தையும் சீறினளாகி
மற்றைய மாதர் மதி முகம் நோக்கி
நெற்றியில் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென்
பொற்பு அமர் கொங்கை பெருதுநற்கு அரிதல்
மானிடவேட மறையவன் தனக்கு
யான் வெளிப்படுவது இல்லை என்று இசைப்ப
மனையிடை வந்த மாமுனி  தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையும் தாயும் தகைபெற மொழிய
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல் பாவம் என்று  அஞ்சி
ஆயிழை தானும் அவன் எதிர்சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம்பகவற்கு அன்பன்  ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்று எண்ணி
ஆசனம் நல்கி அருக்கியம் முதலாய்
பாத பூசனைகள்  பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்பு நெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன் கதலிப்பழம் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுது செய்வித்து
சந்தணங் குங்குமம் சாந்திவை கொடுத்து
தக்கோலத்தோடு சாதிக்காயும்
கற்பூரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடக்காய் விளங்கிய  பொன்னின்
ஒள்ளிய தட்டின் உவந்து முன்வைத்துச்
சிவன் எனப்பாவனை செய்து நினைந்து
தவமுறை முனிவனைத்தாளிணை வணங்கத்
தேன்  அமர்குழலி திருமுகம் நோக்கி
மோனமாமுனி புன்முறுவல் காட்டிக்
கற்றைச்சடையும் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும் நீலகண்டமும்
மானும் மழுவும் மலர்க் கரத்து இலங்க
கூன்மதி நிலவும் கொழித்திட முடிமேல்
வரந்தருமுதல்வன் மடமயில் காண
கரந்த தன் உருவம் காட்டிமுன் நிற்ப
மரகதமேனி  மலைமகள் தானும்
விரைவொடு அங்கு அவன் அடிவீழ்ந்து இறைஞ்சினளே
அரி அயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர் கிம்புருடர் அலகை
சித்தர் தாரகை கந்தருவர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக் கருங்களத்தனை வந்தடைந்து அதன்பின்
மன்றல் அம்குழலிக்கு வதுவை நாள் குறித்து
தென்றல் வந்து இலங்கு முன்றில் அகத்துப்
பொன் திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக்கத்தால் வளை  பல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால் அழகுறவேய்ந்து
நித்திலமாலை நிரைநிரை தூக்கிப்
பத்திகள் தோறும் பல மணி பதித்துப்
தோரணம் நாட்டித் துகில் விதானித்துப்
பூரணப்பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்கு தோறும் திருவிளக்கு ஏற்றி
பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பி
கன்னலும் கமுகும் கதலியும் நாட்டி
பன்மலர்  நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சு அணிமிடற்றனைக்
குலவிய திருமணக்கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர்  மலைமகள் தன்னை
திருமணக்கோலம் செய்தனர் ஆங்கே
எம்பிரானையும் இளங்கொடி தன்னையும்
உம்பரெல்லாம் ஒருங்குடன் கூடி
கடல் என விளங்கும் காவணந்தன்னில்
சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையில்
மறை புகழ்ந்து ஏத்த மகிழ்ந்து இனிது உடனிருத்தி
பறை ஒலியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச்சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளி பொன் தாலி பூட்டச்
சிறுமதி நுதலியைச்சிவன் கைப்பிடித்தபின்
அரிவலம் சூழ எரி வலம் வந்து
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதணி கருங்குழல் பூவைதன் உடனே
ஓதநீர் வேலைசூழ் உஞ்சை அம்பதிபுக
ஏரார்வழியின் எண்திசை தன்னைப்
பாராதேவா பனிமொழி நீ என
வருங்கருங்குழலாள் மற்றும் உண்டோ எனத்
திருந்து இழை மடந்தை திரும்பினள் பார்க்கக்
களிறும் பிடியும் கலந்து விளையாடல் கண்டு
ஒளிர் மணி பூணாள் உரவோன் உடனே
இவ்வகையாய் விளையாடுவோம் ஈங்கென
அவ்வகை அரனும் அதற்குடன் பட்டு
மதகரி உரித்தோன் மதகரியாக
மதர்விழி உமைபிடி வடிவமதாதிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க
நீடிய வானோர் நெறியுடம் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்வி வேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்க
திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையொடு
ஐங்கரதலமும் மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந்துவர் வாயும்
தவளக்கிம்புரித்தட மருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற்  குலவிடுமேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குடவயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலும்
கற்றைச்சடையும் கனகநீள் முடியும்
தங்கியமுறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல் வந்து அவதரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணியமூர்த்தியும்
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணுள்ளோர்களும் விரிந்த நான்முகனும்
மண்ணுள்ளோர்களும் வந்து உனை வணங்க
ஆங்கு அவர் தங்கட்கு அரள் சுரந்து அருளி
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரணமாகப் பலகனி அருந்தி
ஏரணி ஆலின் கீழ் இனிது இரு என்று
பூதலந்தன்னில் புதல்வனை இருத்தி
காதல் கூர்மடநடை கன்னியும் தானும்
மைவளர்சோலை மாநகர் புகுந்து
தெய்வநாயகன் சிறந்து இனிது இருந்தபின்
வானவராலும் மானிடராலும்
கான் அமர் கொடிய கடுவிலங்காலும்
கருவிகளாலும் காலனாலும்
ஒருவகையாலும் உயிர் அழியாமல்
திரம்பெற மாதவம் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற வலிமையினாலே
ஐமுகச்சீயம் ஒத்த அடற்படைசூழ
கைமுகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத்தவரை இடுக்கண்படுத்தி
கொடுந்தொழில் புரியும் கொடுமைகண்டு ஏங்கி
அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரரும்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக்கேட்டு முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்று அவர்க்கு அபயம் கொடுத்தே
அஞ்சுகைக்கரிமுத்து அண்ணலை  நோக்கி
ஆனைமாமுகத்து அவுணனொடு அவன் தன்
சேனைகள் முழுவதும் சிந்திடப் பொருது
குன்று போல் வளர்ந்த குறப்படை கூட்டி
வென்றுவா என்று விடை கொடுத்து அருள
ஆங்கு அவன் தன்னோடு அமர்பல உடற்றிப்
பாங்கறும் அவன்படை பற்று அறக்கொன்றபின்
தேர்மிசை ஏறிச்சினங் கொடு செருவில்
கார்முகம் வளைத்த கயாமுகாசூரன் மேல்
ஒற்றை வெண்மருப்பை ஒடித்தவன் உரத்தில்
குற்றிட எறிந்தான் குருதி சேர்ந்திடவே
சேர்ந்து அவன் வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்து அவன் பொரவே
வந்தமூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்த விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்பு அங்கு இமைநொடி அளவில்
செறிந்தது மற்றவன் திருக்கரத்தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவைத் தனைத்தன் மனை என மணந்தே
ஓகையோடு எழுந்து ஆங்கு உயர்படைசூழ
வாகையும் புனைந்து வரும் வழிதன்னில்
கருச்சங்கோட்டில் கயல் கமுகு ஏறும்
திருச்செங்காட்டிற் சிவனை அர்ச்சித்து
கணபதீச்சரம் எனும் காரணநாமம்
பணபதி புகழ்தரு பதிக்கு உண்டாக்கி
சங்கரன் பார்ப்பதி தனிமனம் மகிழ
இங்கு வந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய பெருமைபெற்று இருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்து இவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித்திங்களின்
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகர்க்கு உரிய விரதம் என்று எண்ணி
மனாதிகள்  கழித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள்
ஒப்பறும் விரதத்து உறும்  ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவரும் கைதொழுது அடியினைப் போற்ற
வனை கழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக்கையும் தழைமுறச் செவியும்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளும்
கொண்டனன்  சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக்கண்டு இங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்தில்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவார் என்று அசனிபோல் சபித்தான்
விண்ணவரெல்லாம் மிகமனம் வெருவி
கண்ணருள் கூருங்கடவுள்  இத்தினத்தில்
கோர வெஞ்சினம் மிகக் கொணடனன் அந்நாள்
மார்கழித்திங்கள் மதிவளர்பக்கம்
சதயம் தொட்ட சட்டி நல்விரதமென்று
இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்
இப்புவிமாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற வகை இனிச்சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து  உதித்த
தருமனும் இளையதம்பிமார் நால்வரும்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி
எண்ணிய விரதம் இடையூறு இன்றி
பண்ணிய பொழுதே பலிப்புண்டாகவும்
செருவினில் எதிர்த்த செறுநரை வென்று
மருமலர்ப்புயத்தில் வாகை சூடவும்
எந்தத் தெய்வம் எவ்விரதத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டு அளிதுதையும் பசுந்துளாய் மார்பனும்
கேட்டருள்வீரெனக் கிளர்த்துதல் உற்றான்
அக்குநீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினம் தீர்க்கும் விநாயகமூர்த்தி
ஓடவைத்திடும் பொன் ஒளித்து ஒளிவிளங்கும்
கோடி சூரியர்போல் குலவிய மேனியன்
கடகரிமுகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரைபோலும் சதுர்ப்புயம் உடையோன்
சர்வ ஆபரணமும் தரிக்கப்பட்டவன்
உறுமதிக்குழவிபோல் ஒருமருப்பு உடையோன்
ஒருகையில் தந்தமும் ஒருகையில் பாசமும்
ஒருகையில் மோதகம் ஒருகையில் செபஞ்செய்
உத்தம மாலையோன் உறுநினைவின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்று இமையவரும் யாவரும் துதிப்ப
நன்றிதரும் திருநாமம் படைத்தோன்
புரவலர் காணப்புறப்படும் போதும்
செருவினில் யுத்தம் செய்திடும் போதும்
வித்தியாரம்பம் விரும்பிடும்போதும்
உத்தியோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கு அவன் தன்னை அர்ச்சனை புரிந்தால்
தீங்கு உறாது எல்லாம் செயம் உண்டாகும்
கரதலம் ஐந்தடைக் கணபதிக்குரிய
விரதம் ஒன்று உளது அதை விரும்பி நோற்றவர்க்கு
சந்ததி தழைத்திடும் சம்பத்து உண்டாம்
புந்தியில் நினைந்த பொருள் கைகூடும்
மேலவர் தம்மையும் வென்றிடலாம் என
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு
நுவலரும் விரதம் நோற்றிடும் இயல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்து எமக்கு உரைத்திடவேண்டும் என்று இரப்ப
வரைக்குடை கலித்தோன் வகுத்து உரை செய்வான்
தேருநீர் ஆவணித்திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்திவந்தனம்  தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக்கடவுளைப்
பக்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும்
வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன் தன்
ஒள்ளிய அருள் திரு உரு உண்டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலும் தகுமால்
பூசை செய்திடும் இடம் புனிதமது ஆக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகங்கோசிகங் கொடி விதானித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச்
சிந்தையின் நினைந்து தியானம் பண்ணி
அவாகனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகாராச மனம்வரை கொடுத்து
ஐந்து அமிர்தத்தால் அபிடேகித்துக்
கந்தஞ் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசு அகல இரண்டு வத்திரம் சாத்தி
பொருந்து உமை சுதனாப் புகலுமந்திரத்தால்
திருந்தும் பளிதத்தீபம் கொடுத்துப்
பச்சறுகு உடன் இருபத்தொரு விதமாய்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே
உமாசுதன் கணாதிபன் உயர்கரிமுகத்தோன்
குமார குரவன் பாச அங்குசகரன்
ஏகதந்தன் ஈசுர புத்திரன்
ஆகுவாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமும் தந்து அருள்புரிவோன்
ஏரம்பமூர்த்தி என்னும் நாமங்களால்
ஆரம்பத்துடன் அர்ச்சனை பண்ணி
 மோதகம் அப்பம் முதற்பணிகாரம்
தீதகல் மாங்கனி தீங்கதலிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங்கனியொடு
தரித்திடு நெட்டிலைத் தாழைமுப்புடைக்காய்
பருப்பு நெய் பொரிக்கறி பால் தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரிய என்று உரைக்கும் மந்திரத்தால்
நிருத்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நானான்கு உபசாரமும்
மற்றவன் திருவுளம் மகிழ்திடச்செய்து
எண்ணும் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண் அறு சுவைசேர் ஓதனம் நல்கி
சந்தனம் முத்துத்தானம் தக்கிணை
அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகு விநாயகத் திரு உருவத்தைத்
தரித்த வஸ்த்திரத்துடன் தானமாய்க் கொடுத்து
நைமித்திகம் என நவில்தருமரபால்
இம்முறை பூசனை யாவர் செய்தாலும்
எண்ணிய கருமம் யாவையும் முடிப்பர்
திண்ணிய செருவில் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரம் ஒருமூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி
விருத்திரா சூரனை வென்று கொன்றிட்டான்
அகலிகை  இவன் தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தரும் கணவனைப் பரிவுடன் அடைந்தாள்
தண் ஆர் மதிமுகத்தாள் தமயந்தி
அந்நாள் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவும் நளனை அடைந்தாள்
ஐங்கரக்கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கட நிருதரை வேர் அறக்களைந்து
தசரதன் மைந்தன் சீதையை அடைந்தான்
பகிரதன் என்னும் பார்த்திவன் இவனை
மகிதலம் தன்னில் மலர்கொடு அர்ச்சித்து
வரநதிதன்னை வையகத்து அழைத்தான்
அட்டதேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்டபோகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்குமணி என்னும் ஒண்டொடிதன்னை
செருக்கொடு வவ்விச் சிசுபாலன் தான்
கொண்டுபோம் அளவிற்குஞ்சர முகவனை
வண்டு பாண்மிழற்றாள் மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங்கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம்
புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனதில் விழைந்தன பெற்றார்
இப்புவிதன்னில் எண்ணுதற்கு அரிதால்
அப்படிநீரும் அவனை அர்ச்சித்தால்
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்று கன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனைபுரிந்து கட்புலன் இலான் மைந்தரை
நாசம்பண்ணி நராதிபர் ஆகிக்
சிந்தையில் நினைந்தவை செகத்தினிற் செயங்கொண்டு
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்
ஈங்கு இது நிற்க இவ்விரதத்து இயல்
ஓங்கிய காதை மற்று ஒன்று உரை செய்வாம்
கஞ்சநான்முகந்தரும் காசிபன் புணர்ந்த
வஞ்சகமனத்தாள் மாயைதன் வயிற்றில்
சூரன் என்று ஒருவனும் துணைவரும் தோன்றி
ஆர்கலி சூழ்புவி அனைத்தையும் அழித்தே
சீருடைச்சுவர்கத் திருவளங்கெடுத்தும்
புரந்தரன் முதலிய புலவரை வருத்தியும்
நிரந்தரம் தீயநெறி நடத்துதலால்
ஆயிரங்கண்ணனும்   அமரரும்  முனிவரும்
நீ இரங்கு எமக்கு என நெடுங்கரம் கூப்பி
இரசதகிரி உறை இறைவனை வணங்கி
வரமிகு சூரன் வலிமைகள் உரைக்கச்
சுடர்விடு மணிமுடிச்சூரனை வெல்லக்
கதிர்விடுவடிவேல் கரதலத்து ஏந்தும்
புதல்வனைத்தருவோம் போமின் நீர் என
அமர்கோனுக்கு அரன் விடைகொடுத்துச்
சமரவேல் விழித்தையலும் தானும்
கூடிய கலவியில் கூடாது ஊடலும்
ஓடியவானோர் ஒருங்குடன் கூடிப்
பாகவன் தன்னைப்பரிவுடன் அழைத்துச்
சூரன் செய்யும் துயரம் எல்லாம்
ஊர் அரவு அணிந்தோற்கு உரை என உரைப்ப
காமனை எரித்த கடவுள் என்று அஞ்சிப்
பாகவன் பயம் உற பயம் உனக்கு ஏதென
உற்றிடும் கரதலத்து உன்னையே தரித்தான்
நெற்றியின் நயனமும் நீயே ஆதலில்
குற்றம் அடாது கூறுநீ சென்றென
வானவர் மொழிய மற்றவன் தானும்
தானும் அச்சபையில் தரியாது ஏகி
எமை ஆளுடைய உமையாளுடனே
அமையா இன்பத்து அமர்ந்து இனிது இருந்த
பள்ளி மண்டபம் பாகவன் குறுகலும்
ஒள்ளிய மங்கை ஒதுங்கி நாணுதலும்
தெள்ளிதிற் பரமனும் தேயுவைக்கண்டே
அறுமுகப் பிள்ளையை அவன் கையில் ஈதலும்
வறியவன் பெற்ற வான் பொருள் போலச்
சோதி நீள்முடிச்சுடரோன் கொணர்ந்து
வாதராசன் மலர் கையிற் கொடுப்ப
நீதியோடு  நின்று கையேந்தி
போதநீள்வாவியும் பொறுக்க ஒண்ணாமல்
தரும்புனற்கங்கை தன்கையில் கொடுப்ப
தரும்புனற்கங்கையும் தாங்க ஒண்ணாமல்
பொருந்திரைச் சரவணப் பொய்கையில் வைப்பத்
தன் ஆர் வதனத் தாமரை ஆறுங்
கண் ஆறிரண்டும் கரம் ஈராறும்
மாண் அயில் ஆதி வான்படையும் கொண்டு
அறுமுகக்கடவுள் அங்கு அவதரித்திடலும்
மறுகிய உம்பர் மகிழ்வுடன் கூடி
அறுமீன்களைப்பால் அளித்திர் என்று அனுப்ப
அங்கவர் முலை உண்டு ஆறுமுகன் தானும்
ஓங்கிய வளர்ச்சி உற்றிடு நாளில்
விமலனும் உமையும் விடையுகைத்து ஆறு
தலைமகன் இருந்த சரவணத்து அடைந்து
முருகு அலர் குழல் உமைமுலைப்பால் ஊட்ட
இருவரும் இன்பால் எடுத்து எடுத்து அணைத்து
தேவர் தம்படைக்கு சேனா பதியெனக்
காவல் கொண்டு அளிக்க கதிர்முடி சூட்டி
அயில்வேல் முதற்பல ஆயுதங் கொடுத்துத்
திசையெலாம் செல்லும் தேரும் ஒன்று உதவிப்
பூதப்படைகள் புடைவரப்போய்நீ
ஓதுறும் அவுணரை ஒறுத்திடு என்று அனுப்ப
இருளைப் பருகும் இரவியைப்போலத்
தகுவரென்று அவரைச் சமரிடைமுருக்கி
குருகுப்பேர் பெருங்குன்றமும் சூரன்
மருமமும் துளைபட வடிவேல் விடுத்தே
யாவரும் வியப்புற இந்திரன் மகளாம்
தேவகுஞ்சரியைத் திருமணம் புணர்ந்திட்டு
அமரர் கோனுக்கு அமர் உலகு அளித்துக்
குமரவேளுங் குவலயம் விளங்க
அமராவதியில் அமர்ந்து இனிது இருந்தான்
சமரவேலுடைச் சண்முகன் வடிவுகண்டு
அமரர் மாதர் அனைவரும் மயங்கி
எண்டருங்கற்பினை இழந்தது கண்டே
அண்டர் எல்லாம் அடைவுடன் கூடி
மாதொரு பாகனை வந்து அடிவணங்கி
மருமலர்க்கடம்பன் எம்மாநகர்புகாமல்
அருள்செய வேண்டும்நீ அம்பிகாபதியென
இமையவர் உரைப்ப இறைவன் தானும்
குமரனைக் கோபம் கொண்டுமுன் முனியக்
காவல்கொண்டு எம்வினை கட்டறுத்து அருளும்
சேவலங் கொடியோன் தேசம் போக
திருந்திழை உமையாள் அருந்துயர் எய்தி
வருந்தி முன்நிற்க மங்கையைப்பார்த்து
மங்கை நீதான் வருந்துதல் ஒழிகுதி
அங்கையாற் சூதெறிந்து ஆடுவோம் வா என
வென்றதும் தோற்றதும் விளம்புவார் யாரென
குன்றமென் முலையாள் கூறிய சமயம்
புற்று அரவு அணிந்த புனிதனைக்காண அங்கு
உற்றனன் திருமால் ஊழ்வினை வலியால்
சக்கிரபாணியைச் சான்றெனக் குறித்து
மிக்கதோர் சூது விருப்புடன் ஆடச்
சாயக நேருந்தட  நெடுங் கருங்கண்
நாயகி வெல்ல நாயகன் தோற்ப
இன்பவாய் இதழ் உமையான் வென்றேன் என
எம்பெருமானும் யான் வென்றேன் என
ஒருவருக்கொருவர் உத்தரம் பேசி
இருவரும் சாட்சி இவனைக்கேட்ப
மாமனை வதைத்த மால் முகம் நோக்கிக்
காமனை எரித்தோன் கண்கடைக்காட்ட
வென்ற நாயகி தோற்றாள் என்றும்
தோற்ற நாயகன் வென்றான் என்றும்
ஒன்றியபொய்க்கரி உடன் அங்கு உரைப்ப
கன்றிய மனத்தொடு  கவுரி அங்கு உருத்து
நோக்கி நீ இருந்தும் நுவன்றிலை உண்மை
வாக்கினில் ஒன்றாய் மனத்தினில் ஒன்றாய்
மைக்கரி உரித்தோன் வதனம் நோக்கி
பொய்க்கரி உரைத்த புன்மையினாலே
கனல் என வயிற்றில் கடும்பசி கனற்ற
நிலமிசை குருட்டு நெட்டுடற்பாம்பாய்க்
கடகரிமுகத்துக் கடவுள் வீற்று இருக்கும்
வடதரு நீழலில் கிட எனச் சபித்தாள்
முளரிகள் பூத்த முகில் நிறத்து உருப்போய்
துளவு அணி மருமனுந்துணை விழி இழந்தே
ஆண்டு அரைகணத்தில் ஆயிரம் யோசனை
நீண்டபைப்பாந்தள் நெட்டுடல் எடுத்து
வளர்மருப்பு ஒன்றுடை வள்ளல் வீற்று இருக்கும்
கிளர்சினை ஆலின் கீழ்க் கிடந்த னனால்
திரிகடக்கரியின் திருமுகக் கடவுளும்
வழிபடும் அடியார் வல்வினை தீர்த்தே
எழில்பெறு  வடமரத்தின் கீழ் இருந்தான்
கம்பமாமுகத்து கடவுள் தன் பெருமையை
அம்புவியோருக்கு அறிவிப்போம் என
உம்பர் உலகத்து ஓர் ஏழு கன்னியர்
தம்பநூல் ஏணியில் தாரணி வந்து
கரிமுகக்கடவுளைக் கைதொழுது ஏத்திக்
கார்த்திகைக் கார்த்திகை கழித்த பின் நாளில்
ஆர்த்த கலிங்கத்து அணியிழை வாங்கி
இருபத்தோர் இழை இன்புறக்கட்டி
ஒருபோது உண்டி உண்டு ஒரு மனமாய்
வேதத்து ஆதியும் பூமியில் எழுத்தும்
ஆதி விநாயகர்க்கு ஆன எழுத்தும்
மூன்று எழுத்து அதனால் மொழிந்த மந்திரமுங்
தேன்தரும் குழலியர் சிந்தையுட் செபித்தே
உரைதருபதினாறு உபசாரத்தால்
வரைமகள் மதலையை வழிபாடு ஆற்றி
இருபது நாளும் இப்படி நோற்று
மற்றைய் நாள் ஐங்கரன் மாமுகன் பிறந்த
அற்றைநாள் சதயமும் ஆறாம் பக்கமும்
சேரும் அத்தினத்தில் தெளிபுனல் ஆடி
வாரணமுகத்தோன் வருபெருங் கோயில்
சீர்பெற மெழுகி திருவிளக்கேற்றி
குலவு பொற்கலைகள் கொடு விதானித்து
மலர்பல தொடுத்திடு மாலைகள ஆற்றி
கொலைபுரி வடிவேற்குகற்குமுன் வருகை
மலைமுகக்கடவுளை மஞ்சனம் ஆட்டி
பொற்கலை நன்நூற் பூந்துகில் சாத்தி
சொற்பெறு சந்தணச் சுகந்தமும் பூசி
செருத்தி செண்பகம் செங்கழுநீரொடு
குருந்து மல்லிகை கோங்கொடுபிச்சி
கருமுகைபுன்னை கடிகமழ் பாதிரி
மருவிரி ஞாழல் மகிழ் இருவாட்சி
தாமரை முல்லை தளை அவிழ் கொன்றை
பூமலர் நொச்சி பூத்தமைக்குவளை
காந்தள் ஆத்தி கடம்பு செவ்வந்தி
வாய்ந்த நல் எருக்கு மலர்க்கர வீரம்
பச்சிலை நொச்சி படர்கொடி அறுகு
முத்தளக் கூவிளம் முதலிய சாத்தி
தூபதீபங்கள் சுகம் பெறக் கொடுத்தே
அப்பம் மோதகம் அவல் எள்ளுருண்டை
முப்பழம் தேங்காய் முதிர்மொழிக் கரும்பு
சீனிதேன் சர்க்கரை செவ்விள நீருடன்
பால்நறு நெய்தயிர் பருப்புடன் போனகங்
கற்பகக்கடவுள் களித்திடத் திருமுன்
பொற்புறப்படைத்துப் பூசனைபண்ணி
நோற்பது கண்டு நோலாது இருந்த
மாப்புருவாகிய பஞ்சாயுதனும்
யாப்புறு கொங்கையீர் யானும் நோற்பேன் என
ஆங்கு அவன் தனக்கும் வேண்டுவது அளித்து
பங்கொடு இவ்விரதம் பரிந்து நோற்பித்தார்
அண்டர் நாயகனாம் ஐங்கரன் அருளால்
விண்டும்பண்டுள வேடம் பெற்றே
உஞ்ஞை மாநகர் புகுந்து உமையொடு விமலன்
கஞ்சநாள் மலர்ப்பதம் கை தொழுதிடலும்
பஞ்சிமென் சீறடிப்பார்ப்பதி நெஞ்சில்
வெஞ்சினம் மிகுந்து விமலனை நோக்கி
யான் இடும்சாபம் நீங்கியது ஏனென
மானெடுங்கண்ணி மணிக்கதவு அடைப்ப
இறையவன் இதற்குக் காரணம்  ஏது என
மறிகடல் துயிலும் மாயவன் உரைப்பான்
பிறைமருப்பு ஒன்றுடைப்பிள்ளை அன்று எனக்குத்
தந்து அருள்புரிந்த தவப்பயன் ஈது எனச்
சிந்தை மகிழ்ந்து தேவர் தேவனும்
பூங்கொடி அடைத்த பொன் தாழ் நீங்கச்
சாங்குமுன் உரைத்த சக்கரபாணி
இக்கதை சொல்ல அக்கணிசடையனும்
மிக்கநல் விரதம் விருப்புடன் நோற்றபின்
மாதுமை அடைந்தவன் தாழ்நீக்கி
நாதனை நணுகிட நம்பனும் நகைத்தான்
நானோ வந்து நகையானது எனத்
தேன்நேர் மொழியாள் தெளியக்கூறென
நன்மதி நுதலாய் நானியந்தன்னில்
உன்மகன் நோன்பின் உறுதி அறிந்து
சிந்தை மகிழ்ந்து சிரித்தேன் யானென
அந்தமில் அரனை ஆயிழை வணங்கிப்
பொருஞ்சூர் அறவேல்  போக்கிய குமரன்
வரும்படியானும் வருந்தி நோற்பேன் என
இறைவன் கதைசொல ஏந்திழை நோற்றபின்
குறமடமகளைக் குலமணம் புணர்ந்தோன்
சுடர்வடிவேலோன் தொல்வினை தீர்த்து
தாதுமை வண்டு உழுந்தாமத் தாமனை
மாது உமையாளை வந்து கண்டனனே
கண்ண நீ கண்ணிலாக்கட் செவியாகு என
தணநறுங்குழல் உமை சாபமிட்டதுவும்
அக்குநீறு அணியும் அரன் முதல் அளித்த
விக்கின விநாயக விரதம் நோற்று அதன்பின்
சுடர்க்கதை ஏந்தும் துளவ மாலையன்
விடப்பணி உருவம் விட்டு நீங்கியதும்
பரிவுகொள் கூத்துடைப்பரமனும் நோற்றுக்
கவுரி அன்று அடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத்
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும்
நாரதமுனிவன் நவின்றிடக் கேட்டே
இந்நிலந்தன்னில் இவ்விரதத்தை
மன்னவன் வச்சிரமாலிமுன் நோற்றுக்
காயத்தெழுந்த கடும்பிணி தீர்ந்து
மாயிரும் புவியில் மன்னனாய் வாழ்ந்து
தடமுலைத்திலோத்தமை தனை மணம்புணர்ந்து
மழவிடைபோற்பல மைந்தரைப் பெற்று
கடைமுறை வெள்ளியங்கயிலையில் உற்றான்
பரிவொடு இவ்விரதம் பாரகந்தன்னில்
விரைகமழ் நறுத்தார் விக்கிரமாதித்தன்
மறிகடல்புவிபெற வருந்தி நோற்றிடு நாள்
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி
மெத்த அன்புடன் இவ்விரதம் நோற்பேன் என
அந்தந்தன்னில் அணியிழை செறித்துச்
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின்
உற்றநோன்பின் உறுதி மறந்து
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து
வற்றிய கொவ்வையின் மாடேபோட
ஆங்கு அது தழைத்தே அலருந்தளிருமாய்ப்
பாங்குற ஓங்கிப்படர்வது கண்டு
வேப்பஞ்சேரியில் போய்ச்சிறை இருந்த
பூப்பயில் குழல்சேர் பொற்கொடி ஒருத்தி
அவ்வியம் இல்லாள் அவ்விடந்தன்னில்
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி
இழையது கிடப்பக்கண்டு அவள் எடுத்து
குழைதவள் வரிவிழிக்கோதை கைக்கட்டி
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்து
செப்பமுடனே திருந்திழை நோற்றிட
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள
கொண்டுபோய் அரசனும் கோயிலுள் வைத்தான்
விக்கிரமாதித்தன் விழிதுயில் கொள்ள
உக்கிரமான உடைமணி கட்டித்
தண்டையும் சிலம்பும் தாளில் நின்று ஒலிப்ப
கொண்டல்போல் வரும் குஞ்சரமுகத்தோன்
மனம் மிகக் கலங்கும் மன்னவன் தன்னிடம்
கனவினில் வந்து காரணமாக
இலக்கண சுந்தரி இம்மனை இருக்கில்
கலக்கம் வந்திடும் கழித்திடு புறத்தென
துண்ணென எழுந்து துணைவியை நோக்கி
கண்ணுறக்கண்ட கனவின் காரணம்
அண்ணல் உரைத்திடும் அவ்வழிதன்னில்
ஆனை குதிரை அவைபல மடிவுற
மாநகர் கேடுறும் வகையது கண்டு
இமைப்பொழுது இவள் இங்கு இருக்கலாகாது என
அயற்கடையவனும் அகற்றிய பின்னர்
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட
அணியிழைதன்னை அவனும் அகற்ற
உழவர் தம்மனையில் உற்று அவள் இருப்ப
வளர்பயிர் அழிந்து வளம்பல் குன்ற
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்
குயவன் மனையிற் கோற்றொடி செல்ல
குயக்கலம் உடைந்து கொள்ளைபோக
அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்
தூசு தூய்தாக்கும் தொழிலோர் மனைபுக
தூசுகளெல்லாம் துணிந்து வேறாக
தூசரும் அவனைத் தூரஞ் செய்ய
மாலைக்காரன் வளமனை புகலும்
மாலை பாம்பாம் வகையது கண்டு
ஞாலம் எல்லாம் நடுங்கவந்து உதித்தாய்
சாலவும் பாவி நீதான் யார் என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா
அம்மனையவனும் அகற்றிய பின்னர்
அவ்வை தன்மனை அவள் புகுந்து இருப்ப
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத்தள்ளினர்
கைகொடு குற்றினர் கண்டோர் பழித்தனர்
அவ்வைமீண்டு தன் அகமதிற் சென்று
இவ்வகைக் கன்னி நீயாரென வினாவக்
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி
சொல்லு விக்கிரம சூரியன் மனை எனச்
சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி
நீரது கொண்டு நிலம் மெழுகிடுகெனச்
சாணி எடுக்கத்தையலும்  சென்றாள்
சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப்
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற
மானேர் விழியாள் வருந்துதல் கண்டு
தானே சென்று சாணி எடுத்து
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு  ஏற்றிப்
புத்தகம் எடுத்து வா எனப்புகல
புத்தகம் பாம்பாய் பொருந்தி நின்று ஆட
மெத்த உள்நடுங்கி வீழ்ந்து அவள் கிடப்ப
கொவ்வையங்கனி வாய்க்கோதையை விலக்கி
அவ்வைதானே அகமதிச் சென்று
புத்தகம் எடுத்து பொருந்தப்பார்த்து
வித்தக நம்பி விநாயகமூர்த்தி
கற்பகப்பிள்ளை செய்காரியம் இதுவென
உத்தமி அவ்வை உணர்ந்து முன் அறிந்து
தவநெறி பிழைத்த தையலை நோக்கி
நுவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகென
கரத்து மூஏழு இழைக்காப்புக்கட்டி
அப்பமும் அவலும் ஆம்பல பண்டமும்
செப்பமதாகத் திருமுன் வைத்தே
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை
வித்தகமாக விளங்கிழை நோற்றுக்
கற்பக நம்பி கருணைபெற்று அதன்பின்
சக்கரவாள சைனியத்தோடு
விக்கிரமாதித்தன் வேட்டையிற்சென்று
தானும் சேனையும் தண்ணீர் விரும்பி
எவ்வகை செய்வோம் என உளம் மெலிந்தே
அவ்வை தன்மனை அங்கவர் அணுக
எய்தும் தாகமும் இளைப்பும்கண்டு
செவ்வே அவற்றைத் தீர்க்க எண்ணி
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை
அப்பமும் நீரும் அரசர்க்கு அருள் என
செப்பிய அன்னை திருமொழிப்படியே
உண்ணீர்க்கரகமும்  ஒரு பணிகாரமும்
பண்நேர் மொழியாள்  பார்த்திபற்கு உதவ
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்
அப்பசிதீர அருந்திய பின்னர்
ஆனை குதிரை அவைகளும் உண்டும்
தானது தொலையாத் தன்மையைக்கண்டே
இவ்வகை சமைத்த நீயாரென வினவ
மவ்வலங்குழலாள் மெளனமாய் நிற்ப
அவ்வை தான் சென்று அரசர்க்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங்காண் இது
குணமுடையிவள் உன் குலமனையாட்டி
இலக்கண சுந்தரி என்று அவ்வை கூற
மங்கையை நோக்கி மனம் மிக மகிழ்ந்து
திங்கள் நேர் வெள்ளிச்சிவிகையில் ஏற்றிக்
கொண்டு ஊர்புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்டொடியாரில் உயர்பதம் உதவினன்
சிந்துரநுதலார் சென்று அடிபணியச்
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே.




சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பியகதையும்
கந்தபுராணக் கதையில் உள்ளதும்
உபதேச காண்டத்துரைத்த நற்கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாத்திரட்டி ஐங்கரற்கு
வாய்ந்த நல்விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங்கமுகில் கயலினம் குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னாகத்தோன்
அரங்கநாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத்  தினம் தொறும்
வரம்பெற வணங்கும் வாத பண்டிதனே.

No comments:

Post a Comment